இந்த வலைப்பதிவில் தேடு

24 பிப்ரவரி, 2024

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை
மின்சாரக் கம்பத்தில்
அவரைப் பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்குக் கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுகொண்டிருந்தன.

கண்களுக்குக் கீழே
சோகமாகப்
பார்த்துக்கொண்டிருந்தார்.

புகைப்படத்துக்குக் கீழே வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
என்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரைக் காணவில்லை
நண்பர்கள் மட்டும் இருந்தனர்.

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கிக்கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்

யாரோ ஒருவன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்.

இறுதி வரை அழுதுகொண்டிருந்தன
இரண்டு கண்கள்

ஒருநாள்
அதுவும் மறைந்துவிட்டது! 

- என்.விநாயகமுருகன்

கருத்துகள் இல்லை: