இந்த வலைப்பதிவில் தேடு

வைரமுத்து கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைரமுத்து கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜனவரி, 2021

"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

கடலோரக் கவிதைகள் 
திரைப்படப் பாடல் ஒலிநாடாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளை      பாரதிராஜா தன் குரலில் வாசித்த கவிதைகள்


உன்னைப் பார்த்த பிறகுதான்
நான்
என் தோட்டத்தில்
பூச்செடிகள்
வைக்க ஆரம்பித்தேன்

என் வாழ்க்கைக்குள்
தென்றலாய்
நீ வந்த பிறகுதான்
நான்
திறக்க மறந்த
ஜன்னல்களையெல்லாம்
திறந்து வைத்தேன்

இது என்ன நியாயம்?
எனக்கு 
சுவாசிக்கக் கற்றுக்
கொடுத்து விட்டு
காற்றே !
உன் திசையை
இப்போது
ஏன் திருப்பிக் கொண்டாய் ?

இருண்டு கிடந்த
என் மனதில்
விளக்கேற்றினாய் !
இப்போது
என் கண்களையே
களவாடிக் கொண்டாயே !
என் கண்கள் தான்
நீ ஏற்றிய
விளக்குக்கு விலையா?

ஏன் பைங்கிளியே !
நீ
எவ்வளவுதான்
பறந்தாலும்
வானத்தின் விளிம்பிற்கு
வெளியே போக முடியாது
கிளியே !


காதல் -
ஒரு ரகசிய மழை
பாலைவனங்களையெல்லாம்
பிருந்தாவனங்களாக்கி விடுகிறது.

காதல் நதி
மனமெங்கும்
கலகலவென்று பரவும் போது
அது 
கரும்பாறைகளைக் கூட
கரைத்து விடுகிறது
இதுதான் காதலா?

மனதுக்குள்
இப்படி ஒரு
மாயப் பிரவேசம் இருக்கிறதா?

ஏ காதலே !
ஒரே நாளில்
உடம்பெல்லாம்
லட்சம் சிறகுகளை முளைக்க
       வைத்து விட்டாயே !

நீ போட்ட மந்திரத்தில்
எந்திரத்திலெல்லாம்
பூ பூக்க ஆரம்பித்து விட்டதே !


நிறைவேறிய காதல்
வார்த்தையாகிறது !
நிறைவேறாத காதல்
கவிதையாகிறது !

காதல் -
வார்த்தைகளை விட
மெளனத்தையும்
கண்ணீரையும்தான்
அதிகமாக நேசிக்கிறது !

காதல் -
தன்னைப் பேசுவதில்லை
அதனால்தான்
அது பேசப்படுகிறது.
அதோ !
அவனது தோட்டத்தில்
மழை பொழிய வந்த மேகம்
இடியை மட்டும்
இறக்கி விட்டுப் போய்க்
கொண்டிருக்கிறது


எல்லா மொழியிலும்
அதிகமாக எழுதப்பட்ட
வார்த்தை
காதல் தான் !
ஆனால்
எல்லா தேசங்களிலும்
தடை செய்யப்பட்ட
சொல்லும்
காதல் தான் !
சொல்லப்படாத கவிதை
மொழியின் நஷ்டம் !
சொல்லப்படாத காதல்
சொர்க்கத்துக்கே நஷ்டம் !
ஏ பேதைப் பெண்ணே' !
நீயாவது சொல்லி விடேன்

காதலையும்
கர்ப்பத்தையும்
மாராப்புப் போட்டு
ஏன்
மறைக்கப் பார்க்கிறாய் ?


"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்


அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்


கண்ணே !

நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.


ஊர் ஒடுங்கி விட்டது !
பிறை நிலவு 
தன் மெளனத்தை மறைக்க
முகிலை இழுத்து 
முக்காடு போட்டுக் கொள்கிறது!

நட்சத்திரங்களை 
காவலுக்கு வைத்து விட்டு 
இரவு கூட உறங்கி விட்டது
நீ மட்டும் உறங்கவில்லை.!


நீ இமைக்கும் சப்தம் தான்
எனக்குக் கேட்கிறதே!
என் இதயத் துடிப்பு
உனக்குக் கேட்கிறதா?


வெளியே வா கிளியே !
என் இமைகளும், விழிகளும்
ஒரு உடன்படிக்கைக்கு வராமல்
அடம் பிடிக்கின்றன !

இன்று நீயும், நானும்
சந்திக்கா விட்டால்
இந்த இரவு
ஒரு பகலைச் சந்திக்காமலேயே
போய் விடும் !

உன்னை எண்ணி உள்ளம் வாடும் 
கண்கள் இரண்டும் சண்டை போடும்

முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?

இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?

அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?

உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?

கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது

இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது

15 ஜனவரி, 2021

மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்

பாரதிராஜாவின் "மண்வாசனை " படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்


அவள் யார்?

யாரவள்?

இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
 
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
 
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
 
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
 
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட

இன்னும் சொல்கிறேன்!


23 நவம்பர், 2011

வைரமுத்து காதல் கவிதை வரிகள் :



வைரமுத்து காதல் கவிதை வரிகள்


என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்



.....................................................

என் பெயரே
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
......................................................

என்னை
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
.....................................................

முதலில் –
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.






















உன்
அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
.......................................................

கண்ணே !
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிற
..........................................................***************