இந்த வலைப்பதிவில் தேடு

18 ஜனவரி, 2021

எம்.ஜி.ஆருக்கு கவிஞர் வைரமுத்துவின் கவிதாஞ்சலி

எம். ஜி. ஆருக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 
கவிதாஞ்சலி

ரோஜாக்களே !
இனி
யாருக்காக பூப்பூப்பீர்கள்?

அலைகளே !
இனி
யாருக்காகக் கை தட்டுவீர்கள்?

சாலைகளே !
இனி
யார் வருகைக்காகக்
காத்திருப்பீர்கள்

ஒரு
புன்னகை ராஜாங்கம்
போய் விட்டது !

கவிஞர்களின் காதலன்
காலமாகி விட்டான் !

வற்றிப் போகாத
வரலாறே !

உன்னை 
நேசிக்கும் நெஞ்சங்கள்
நடிப்பில் கூட
உன்னை
இறக்க விட்டதில்லையே !
நிஜத்தில் இறந்தாயே
நியாயமா?

தென்னகத்தையே
சென்னைக்கு வரவழைத்து விட்டு
நீயெங்கோ போய் விட்டாய்
நீதியா?

உன் தொண்டர்கள்
மாலைகள்தான்
வாங்கினார்கள்

மாலையில் வாங்கிய
மாலைகள்
காலையில் பார்த்தால் 
மலர் வளையல்கள் !

ஒரு நாள் -
எனக்கு நீ
விருதளித்தாய் !
தங்கம்தான் விருதென்று
எல்லோரும் நினைத்தார்கள்
நான் மட்டும் நினைத்தேன்
உன்
விரல் தொட்டதே
விருதென்று


உன் வயது
ஒரு நூற்றாண்டுக்குள் ;
உன் வாழ்க்கையோ
சில நூற்றாண்டுகள்

காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !

கிராமத்துக் காற்றில்
கலந்திருக்கும் உன் கீதங்கள் !

வெள்ளித்திரையில் நீ ஓட்டிய
குதிரைகளின்
குளம்படிச் சத்தம் !

காது மடல்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் உச்சரிப்பு !

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும்
உன்
ராஜ சித்திரம் !

பாமர மக்களை
நிஜமாய் நேசித்த
நேசம் !

இவையெல்லாம் உன்
காலச் சுவடுகள்

காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !

யாருடைய 
சாவுக்கும்
மரணம் மட்டும்
வருத்தப்படுவதில்லை

ஒரு நாள்
மரணத்திற்கு
மனசாட்சி வந்தால்
உன்னிடம் மட்டும் வந்து
மன்னிப்பு கேட்கும்





கருத்துகள் இல்லை: