இந்த வலைப்பதிவில் தேடு

25 அக்டோபர், 2018

மழைக்காலப் பூக்கள் - கவிப்பேரரசு. வைரமுத்து





















மழைக்காலப் பூக்கள் :

அது ஒரு
காலம் கண்ணே
கார்காலம் !
நானும் நீயும்
நனைந்து கொண்டே
நடக்கிறோம்
ஒரு மரம் !
அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருக்கிருந்தது


இருந்தும்
அந்த
ஒழுகுங்குடையின் கீழ்
ஒதுங்கினோம்
அந்த மரம்
தான் எழுதி வைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்புக் கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது


இலைகள்
தண்ணீர்க் காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன
சில நீர்த்திவலைகள்
உன்
நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப் பாதையில்
ஓடிக் கொண்டிருந்தன !


அந்தி மழைக்கு நன்றி !


ஈரச்சுவாசம்
நுரையீரல்களின்
உட்சுவர்களில்
அமுதம் பூசியது
ஆயினும் – நான்
என் பெருமூச்சில்
குளிர்காய்ந்து கொண்டிருந்தேன்


நம்
இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரிகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது
எவ்வளவோ பேச
எண்ணினோம்
ஆனால்
வார்த்தைகள்
ஊர்வலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடவி விட்டிருந்தது

உன் முகப்பூவில்
பனித்துளியாகிவிடும்
 இலட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்துளிகள்
பட்டுத் தெறித்தன
உனக்குப்
பொன்னாடை போர்த்தும்
கர்வத்தோடு
எனது கைக்குட்டையை
எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ
நீட்டினாய்
நான் கேட்டேன்
“இந்தக் கைக்குட்டை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக் கூடாதா?"
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என்
இதயத்துக்குள் பெய்தது
அது ஒரு
காலம் கண்ணே !

கார் காலம்.


கருத்துகள் இல்லை: