இந்த வலைப்பதிவில் தேடு

30 டிசம்பர், 2020

வாரப் பத்திரிக்கைகளில் வந்த கவிதைகள் (1989)

வாரப் பத்திரிக்கைகளில் 

வந்த கவிதைகள் (1989)

தராசு முள்:

இரண்டு
பொண்டாட்டிகளின்
இடையினில் சிக்கி
இழுபடும்
இளிச்சவாயன்

 -      எஸ். கணேஷ் குமார்

 

என் குறை சொல்ல
கோட்டைக்குப் போனேன்
அங்கே அமைச்சர்கள் இல்லை
வெளிநாட்டுப் பயணமாம் !
 
கோவிலுக்குப் போனேன்
தெய்வத்தைப் பார்க்க
அங்கே சிலை இல்லை.
அதுவும் –
வெளிநாட்டுப் பயணமாம் !

-      கடுவை கோபால்சாமி

 


ஒரு ராமன்தான்
வரவில்லை
எங்கள் வீட்டு
ஜன்னல் வில்லை
ஒடித்து –
அழும் என்னை
மீட்க
அட ஒரு
இராவணன் கூடவா
இல்லை ?
என்ன
சிறையெடுக்க !

-      லட்சுமி பிரகலாதன்

ராமனென்ன
அடுத்த அவதாரம்
கோகுலத்தில்
என்று
உறுதியளித்தால்
நான் கூட
ஏக பத்தினி
விரதன்தான் !

-      தாராபுரம் P.R.C பாலு

 

பேருந்து நடத்துனர்கள்:

தினம் தினம்
LIC ஐ
60 பைசாவுக்கும்
எக்மோரை
70 பைசாவுக்கும்
விற்றுக்கொண்டிருக்கும்
விற்பனையாளர்கள்

-      ரத்னம் – வாசு

 

இலக்கண வகுப்பில்
தமிழாசிரியர்
தலையில் குட்டினார்
‘அடி, தொடை, தெரியாமல்
இருக்கிறாயே? 
உருப்படுவியா?”
திருமணம் முடிந்து
ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அடியெனுக்கு இன்று
ஐந்து குழந்தைகள்

-      ரமணன்

 

கட்சி மாறுவதென்பது…
பட்டுப் புடவை
பத்து நாளில்
வேண்டுமென
என் நிலையறியாது
என் மனைவி புலம்புகையில்
வெட்டிச் செலவென செப்பும்
அம்மா கட்சி நான் –
 
அறுபடை வீட்டுக்கும்
ஆறு நாளில்
போக வேண்டுமென
அம்மா நச்சரிக்கையில்
அத்தனைக்கும்
அழுது தொலைக்காதீர்
அனாவசியச் செலவென
அசை போடும்
அன்பு மனைவி கட்சி நான் –
 
கட்சி மாறுவதென்பத்
எனக்கொன்றும்
புதிது அல்ல !!....!!

-பொன்.இரா.ரவீந்திரன்

 

கண்ணன் காட்டிய வழி :


பலரிடம் திருடி
ஒருத்திக்குதவி
அவன்
அனாதை ரட்சகன் ஆனான்
 
ஊரைச் சுரண்டி
வழிவிடு முருகன்
திருக்கோயிலுக்கு
குடமுழுக்காட்டி
இவன்
பெரிய தருமிஷ்டன் ஆனான்
கன்டு வட்டிக் கந்தசாமி
கண்ணன் காட்டிய வழியில்

-      மீரா (ஊசிகள்)

கருத்துகள் இல்லை: