இந்த வலைப்பதிவில் தேடு

28 டிசம்பர், 2020

காதல் கவிதைகள் -மீரா, அபி, புகழேந்தி, சிற்பி

காதல் கவிதைகள் 

- மீரா, அபி, புகழேந்தி & 
சிற்பி பாலசுப்பிரமணியம்


நவயுகக் காதல் :

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்…
 
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங்கூட…
 
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்…
மைத்துனன்மார்கள்
 
எனவே
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

-      மீரா (ஊசிகள்)



நீயும் நானும் :

நீ… நீ… உன்னை
எங்கோ… என்றோ
பார்த்த நினைவு
 
காதல் மாளிகை
நிலா முற்றத்தில்
வசந்தங்களின் ஊர்வலத்தை
வேடிக்கை பார்க்கக்
கூடினோமல்லவா …!
 
நம்மிடம்
சஊகம் அனுப்பிய
வேற்றுமை வெள்ளங்கள்
நம் அன்பின் பனியால்
சமாதியாய் உறைந்த பின்
காலடிச் சத்தத்தால்
வாழ்வின் புதிய தொனிகள்
அறிமுகப்படுத்தினோம்
 
உறக்கக் கோப்பைகளில்
கன்வு மதுவின்
கண்ணாடிக் குமிழிகளில்
நம் முகங்கள்
 
ஒரே நேரத்தில்
பல பிறவிகளை
எடுத்ததை
ரசித்திருக்கிறோம்

-      அபி (மௌனத்தின் நாவுகள்)






ப்ரியமானவளே :


என் எஃகு இதயத்தைக்
‘காந்த’ விழிகளால்
பறித்துக் கொண்டவளே…
நிராயுதபாணியான
என் மீது
உன்
பார்வை அம்புகளால்
நீ
வீசிய பாணம்
என்னை மட்டுமா
தோற்கடித்தது
 
        என் ப்ரிய சகி
தூண்டில் மீனாய்
ஏன்
துன்புறுத்துகிறாய்
 
உன் உடலை விட
எனக்கு
உன்
உடல்தான் இனிக்கிறது…

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)


காதல் நெஞ்சம்:
 
விரிந்த ரோஜா           
ஜன்னல் வழியே
தலை நீட்டும்…
 
குவிந்த இதழில்
மல்லிகை மொட்டுகள்
முறுவலிக்கும்
 
கெண்டை மீன்கள்
இங்குமங்கும்
பாய்ந்து பாய்ந்து
       நீந்தும்,…..
 
பூப்பஞ்சுக் கரங்கள்
புரியாத கோலங்களில்
புணர்ந்து கொள்ளும்
 
கால் விரல்கள்
வெட்கம் சிந்தி
நெஞ்சத்தை சூடேற்றும்…
 
உலகம்
கடுகாய் சிறுத்துக்
காலடியில் கிடக்கும்
 
சுய நலம்
சும்மா இருக்காமல்
சுண்டி சுண்டி இழுக்கும்
 
வெட்கம்
நகக் கண்கள் வழியே
நரம்புகளைத் தாக்கும்…
 
ஓ…
காதல் ஒப்பந்தம்
கையெழுத்தானதாலா...?

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)



ரோஜா மொக்குகளை
கண்களாய் அழைக்க
மௌன மந்திரம்
உதட்டில் சிலிர்க்க
நீ நின்ற திருக்கோலம்
என் நினவுத் தோட்டத்தின்
நிரந்தர வசந்த காலம்
 

-      சிற்பி பாலசுப்பிரமணியம் (குமுதம் 07.11.1988)


கருத்துகள் இல்லை: